INFOS SMART

Thursday, December 27, 2012

தண்ணீர் பேசுகிறேன் ! ! !



அன்புள்ள தமிழக முதல்வருக்கு, நான் தண்ணீர் பேசுகிறேன்!

ஈரமிகு நெஞ்சம் கொண்ட உங்களின் கனிவான கவனத்திற்கு, எனது கருத்தை நானே எடுத்துரைக்கிறேன்.

தண்ணீர் வாக்கியங்களால், தமிழ்நாட்டின் தரைப்பரப்பெங்கும், வளங்களை எழுதிய நான், இன்று வறண்ட குரலில், வகையற்ற நிலையில், என் வறுமையைப் பேசுகிறேன்...

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். இப்போதோ உலகில் என் இருப்பே கேள்விக்குறியாகி வருகிறது.

ஆறுகளாய், ஏரிகளாய், குளங்களாய், வாய்க்கால்களாய் மனிதகுலத்தை வாழ்வித்தேன்.

எனது எல்லா வடிவங்களும், சிதைத்து சீரழிக்கப்பட்டு வருகின்றன.

ஓர் ஆட்சியாளருக்கும், நீராதாரத்துக்குமான உறவு மிகுந்த உயிர்த்தன்மை உடையது.

மன்னராட்சி தமிழ் மண்ணில் நடந்த காலத்திலேயே புலவர்கள் அரசனுக்குப் புகன்ற அறிவுரையில் நீராதாரத்திற்கு நிறைந்த முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

வெள்ளைக்குடி நாகனார் என்ற சங்கப்புலவர் சோழன் கிள்ளிவளவனுக்கு அறிவுரை கூற இயற்றிய ஒரு பாடலில், வில்லேர் உழவர்கள் அடைகிற வெற்றி, நிலத்தில் பயிர்விளைக்கும் நல்லேர் உழவர்களின் கையில்தான் உள்ளது என்கிறார்.

காட்சிக்கு எளியவனாக, கடமை தவறாதவனாக மன்னன் இருந்தால் மட்டும் போதாது, அரசாங்க ஊழியர்கள் அனைவரிடமும் இக்குணம் இருந்தாக வேண்டும்.

மக்களை வளமாக வைத்திருக்கும் ஆட்சி அழிவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். அந்த ஆட்சியை இழந்து வாழ்வதைவிட, தாம் அழிவதே சிறப்பு என்றெண்ணிக் களமிறங்குவார்கள். இத்தகைய மனஉறுதி கொண்ட மக்களை எத்தகைய படைவலிமையினாலும் வெல்ல முடியாது.

ஒரு நாட்டை வளம் கொழிக்க வைக்கும் அரசனைக் காணும் பிற நாட்டவரும், தம் நாட்டையும் இவனே ஆளவேண்டும் என ஆசை கொள்வர். தங்கள் நாட்டில் கிளர்ச்சி செய்து, ஆட்சியை இவனிடமே ஒப்படைப்பர்.

போர் தொடுக்காமலேயே பல தேசங்கள் அவன் குடையின் கீழ் தானாக வரும். உலகம் முழுவதையும் ஒரு குடை கீழ் ஆட்சி செய்ய ஆசைப்படும் அரசன், தன் நாட்டு உழவர்களை உளம் குளிர வைத்திருக்க வேண்டும். உழவர்களுக்கான நன்மைகளை நாள்தோறும் சிந்தித்துச் செய்துவர வேண்டும் என்று பாடுகிறார்.

உழவர் நலன் காக்க, இன்னொரு புலவர் கூறும் உன்னதக் கருத்துகள் இன்று உயிர்ப்பிக்கப்பட வேண்டியவையாய் உள்ளன.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடும் புலவர் குடபுலவியனார், உழவுத் தொழிலை உயர்த்திப் போற்ற விரும்பும் வேந்தன், நீர் நிலைகளைப் பெருக்க வேண்டும். அது அவனுக்கு நித்திய நன்மைகளையும், நிலையான புகழையும் தரும் என்று அறிவுறுத்துகிறார்.

நீரின்றி அமையா யாக்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோருயிர்கொடுத்தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

நீரும் நிலனும் புணரீ யோரீண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே

என்கிறார்.

நீரால் உண்டான உடல்களுக்கெல்லாம், உணவு கொடுப்பவரே உயிர் கொடுப்பவராவர். உடம்பு உணவையே அடிப்படைத் தேவையாகக் கொண்டது. உணவு (உண்டாக்கல்) என்பது நிலத்தோடு நீரைத் தேக்குவது ஆகும். நிலத்தில் நீரைத் தேக்கி வைப்பவர்கள் உடலையும் உயிரையும் ஒன்றுசேர்த்தோர் ஆவர் என்கிறார்.

நாடாளுமன்றம், எதிர்க்கட்சிகள், நீதிமன்றங்கள், பத்திரிகைகள் என எதுவுமே இல்லாத, எதுவும் அரசனின் அதிகாரத்தில் தலையிட முடியாத மன்னராட்சி காலத்தில், மக்கள் நலனில் அக்கறை கொண்டு, புலவர்கள் நீர்நிலைகளுக்காக அரசனிடம் வாதாடி வலியுறுத்தியுள்ளார்கள்.

மக்களாட்சியில் நீர்நிலைகளின் நிலை என்ன?

ஆறுகள் அழிக்கப்படுகின்றன. ஆலைகளின் மாசுகள் அவற்றில் அளவின்றிக் கலக்கின்றன.

தோல் தொழிலும், சாயப்பட்டறையும் தொல் தொழிலான விவசாயத்தை அழிக்கின்றன. துள்ளியோடும் நதிகளைத் தூக்கில் போட்டுத் துடிக்கவைத்துள்ளன.

மாதாவின் மார்பை மகவுகளே அறுப்பதுபோல்

ஆறுகளின் மணல் வளத்தை ஆறறிவினரே கொள்ளையடிக்கின்றனர்.

ஏரிகளைக் கொலை செய்து, "ஏரியா'க்கள் ஆக்கிவிட்டார்கள்.

குளமாய் இருந்த இடங்களைக் குப்பைகளால் தூர்த்து நிலமாய் நிமிர்த்திவிட்டார்கள். கண்மாய்களுக்குக் கருத்தடை செய்துவிட்டார்கள்.

வளங்களை எழுதுகிற வாய்க்கால்களோ, வராகங்கள் புரளுகிற சாக்கடைகளாகி விட்டன.

1970-க்குப் பின் அனைத்து நீர் சேகரிப்புக் கட்டமைப்புகளும் தமது திறனை இழந்துவிட்டன. நகர்மயமாக்கமும் அதீதமான நிலத்தடி நீர்ச்சுரண்டலும் பெரும் அபாயமாக வடிவெடுத்துள்ளன. நிலத்தடி நீர் கீழே சென்றதற்குச் செம்மண் வளத்தை வணிகப்படுத்தியதும் ஒரு காரணம் என்கிறது தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை.

நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சைத் தரணி என்றும், தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றும் போற்றப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் மற்றும் காவிரியின் வரவைக் காலமெல்லாம் எதிர்நோக்கும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகள் இன்று வேளாண்மையின் சமாதிகளாகி வருகின்றன.

காவிரிப் படுகையின் விவசாயம் இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. கல்வி வளராத காலத்திலேயே, கல்லணையைக் கட்டிய தொலைநோக்கன் கரிகாலன் ஆண்ட பகுதி இது. இங்கோ பரிசாய் விளங்கிய வேளாண் நிலங்கள் இன்று தரிசாய் மாறி வருகின்றன. தரித்திரத்தின் சரித்திரத்திற்கு தமிழகம் இப்போது முன்னுரை எழுதிக் கொண்டிருக்கிறது.

காவிரிப் படுகையின் சராசரி மழைப் பொழிவு ஆண்டுக்கு 1,173 மில்லி மீட்டர். இதில் கோடை காலத்தில் 266 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. ஆனால் அப்போதைய தேவையோ 663 மில்லி மீட்டர் ஆக உள்ளது.

தென்மேற்குப் பருவக்காற்றால் கேரள, கர்நாடக மாநிலங்கள் அதிக மழைபெறும். தமிழகத்தின் தென்மாவட்டங்கள் கணிசமான மழைபெறும். காவிரிப்படுகை பெறும் மழை மிகக்குறைவே.

வடகிழக்குப் பருவக்காற்றின் போது காவிரிச் சமவெளி கனமழை பெறுகிறது. பெய்கிற மழை 529 மில்லி மீட்டர். ஆனால் தேவையோ 361 மில்லி மீட்டர் மட்டுமே.

தென்மேற்குப் பருவத்திலோ ஊரில் மழை இல்லாமல் போகும். வடகிழக்குப் பருவத்தில் மழையால் ஊரே இல்லாமல் போகும்.

கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூவும் எல்லாம் மழை

அதிகமாய்ப் பெய்து கெடுப்பதும், அளவாகப் பெய்து வளத்தைக் கொடுப்பதும் மழைதான் என்ற குறளுக்கு காவிரிச் சமவெளிப்படுகையே கண்முன்பு உள்ள உதாரணம்.

1970-ஆம் ஆண்டு வெள்ளக் கட்டுப்பாடு வடிகால் சீர்திருத்தம் என்ற திட்டத்தைத் தமிழக அரசு தீட்டி மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது. மத்திய அரசு இதை ஒப்பவில்லை. ஒப்புதலும் அளிக்கவில்லை. அதன்பிறகு காவிரிப்படுகையின் பாசன மேம்பாட்டுக்கென உருப்படியான திட்டங்கள் எதுவும் வரவில்லை.

குறுவைச் சாகுபடி கருகிப்போய், சம்பா சாகுபடியும் சாபம் வாங்கிய நிலையில் காவிரி விவசாயம் கண்கலங்கி நிற்கிறது. கர்நாடகமும், மத்திய அரசின் நாடகமும் சேர்ந்து தஞ்சை விவசாயியை வஞ்சித்து வருகின்றன. போதிய நீர் இல்லாமல் வேளாண் மக்கள் புழுவாய்த் துடிக்கின்றனர்.

ஆனால் 1996-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காவிரிப்படுகை விவசாயமே மூழ்கி அழுதது. காரைக்கால் என்ற சிறு பகுதியிலேயே வெள்ளச் சேதம் 26 கோடி ரூபாய் என்றும், வேதாரண்யம் பகுதியில் மானா கொண்டானாறு, வனவனாறு ஆகியவை உடைப்பெடுத்ததில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிரும், 10 ஆயிரம் ஏக்கர் கடலை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கி அழிந்தன என்றும் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை 2005 தெரிவிக்கிறது.

வெள்ளப் பெருக்கால் விளைச்சல் அழிவது ஒருபுறம், நதிநீர் வராத காலத்தில் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படுவதால், கடல்நீர் உட்புகும் அபாயம் மறுபுறம்.

கொள்ளிடத்தில் 107 கிலோ மீட்டர் தூரத்திற்கு, மேலணைக்கும் கீழணைக்கும் இடையே 15 கிலோ மீட்டர் இடைவெளியில் தொடர்ச்சியாக தடுப்பணைகளைக் கட்டுவதன் மூலம் கடலில் வீணாகக் கலக்கும் நீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம். இத்தகைய தடுப்பணைகள் மூலம் 50 டி.எம்.சி. தண்ணீரைச் சேமிக்கலாம்.

ஜூன் முதல் டிசம்பர் வரை பெய்யும் 850 மில்லி மீட்டர் மழை நீரையும் இவ்வணைகள் மூலம் சேமிக்கலாம் என பொதுப் பணித்துறையின் மேனாள் கண்காணிப்புப் பொறியாளர் என்.நடராஜன் கொடுத்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

மதுரை, கரூர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தின் விவசாயமும் கத்திமேல் நடக்கிறது.

பல்லாயிரம் குடும்பங்கள் இடம்பெயர்ந்த தியாகத்தின் மீது கட்டப்பட்ட வைகை அணையின் நீர்ப்பிடிப்புத் திறனும், கொள்ளளவும் பெருமளவு குறைந்து விட்டதாக நிபுணர்கள் அறிக்கை கவலை தெரிவிக்கிறது. காரணம், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழலை, மனிதன் கெடுத்ததால் மழை வெள்ளப் பெருக்கு மண்ணை வாரிக்கொண்டு வருகிறது. இதனால் அணையின் கொள்ளளவு குறைகிறது.

வைகை ஆற்றுநீர் கண்மாய்களைத் நிறைத்து மீண்டும் ஆற்றுக்கே திரும்பும் வகையில் அருமையான கட்டமைப்பைக் கொண்டது.

கண்மாய்கள் காலங்காலமாய் கண்டுகொள்ளப் படாததால் நீரை சுவாசிக்கும் கண்மாயின் பாதைகள் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டன.

சன் பேப்பர் மில்ஸின் கழிவு தாமிரபரணியைத் தாக்குகிறது.

சதர்ன் இந்தியா விஸ்கோஸ் நிறுவனத்தின் கழிவு பவானி ஆற்றைப் பாழாக்கியது. (விவசாயிகளின் போராட்டத்தால் விஸ்கோஸ் 2001-இல் மூடப்பட்டது).

சாயப்பட்டறைகள் நொய்யல் ஆற்றைச் சாகடித்து வருகின்றன.

ஆற்று நீரை முறையாகத் தேக்கவும், மாசில்லாமல் காக்கவும் முயற்சிகள் இல்லை. ஏரி நின்ற இடங்களில் எல்லாம் கட்டடங்கள் ஏறி நிற்கின்றன. அரசாங்கக் கட்டடங்களும் இதில் அடக்கம்.

குளங்கள், கண்மாய்கள், வாய்க்கால்களின் எண்ணிக்கை அதிவேகமாகக் குறைந்து வருகின்றன.

கடந்த 25 ஆண்டுகளில் நீர்நிலைகளின் எண்ணிக்கைக் குறைந்திருக்கிறதே அன்றி கூடவில்லை.

"ரியல் எஸ்டேட்' கொடுந்தொழிலால், வேளாண் பூமிகள் திட்டமிட்டு தரிசு நிலங்களாக்கப் படுகின்றன.

விளை நிலங்கள் எல்லாம் விலைநிலங்களாகி விட்டால், சோற்றுக்கு எங்கே போவார்கள் என்று தெரியவில்லை.

அன்னியச் செலாவணி மோகத்தில், இறால் பண்ணைகளை அமைத்து, விளைநிலங்கள் விஷமாக்கப்பட்ட கொடுமையை விளக்கப் பக்கங்கள் போதாது.

மழைநீர் சேகரிப்பு என்ற மகத்தான திட்டத்தைத் தந்த முதல்வரே, காவிரிக்காக கர்நாடகத்தோடு போராடி வருகிறீர்கள். கர்நாடகத்திலும், கேரளத்திலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிரெதிர் துருவங்கள் ஒன்றுசேர்ந்து தமிழகத்தின் உரிமையை மறுப்பது குறித்து கருத்துக் கூறும் அளவுக்கு எனக்கு அரசியல் தெரியாது.

என் மீது எதையும் எழுத முடியாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் என் மீது தான் பிரிவினை அரசியலை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரியாத என்னை வைத்து மக்களைப் பிரிப்பது அரசியல் சாணக்கியர்களுக்கு தண்ணீர் பட்ட பாடு...

இதயத்தில் ஈரமும், இயல்பில் வீரமும் உங்களுக்கு உண்டு.

தமிழகத்தின் நீர்நிலைகள் மீதும், நீர்வளத்தின் மீதும் கவனம் செலுத்துங்கள். நீரை விற்பனைப் பொருளாக்கும் அபாயத்தைப் போக்குங்கள்.

நீரின்றி அமையாது உலகு என்ற நிலைமாறி, நீரின்றி அமையாது உலக அரசியல் என்னும் நிலை வந்துவிட்டது.

நீங்கள் என்னைப் பாதுகாத்தால் நானும் உங்களைப் பாதுகாப்பேன்.

வாக்குரிமை இல்லாத என்னை,

வழக்கமான அரசியல்வாதி போல,

அலட்சியப்படுத்தி விடாதீர்கள்

வாக்குரிமையினும் சிறந்தது

வாழ்வுரிமையல்லவா?

இப்படிக்கு

தங்களின் நடவடிக்கையைத் தாகமுடன் எதிர்பார்க்கும் தண்ணீர்.

நன்றி. தினமணி

By ஜெ. ஹாஜாகனி

Visit infossmart Classifieds for free advertisments

No comments:

Post a Comment