வேப்பம்பூ மிதக்கும் எங்கள் வீட்டு கிணற்றில்
தூர்வாரும் உற்சவம்
வருடத்திற்கு ஒருமுறை விசேசமாய் நடக்கும்
ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க அதிசயங்கள் மேலே வரும்
கோடங்ககுச்சி,
கோலி, கரண்டி,
கட்டையோடு
உள்ளேவிழுந்த துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி
திருடியதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றுக்குள் கிளறி
எடுப்போம் நிறையவே
சேறுடா செறுடா
என்று அம்மா அதட்டுவாள்
என்றாலும் சந்தோசம்
கலைக்க யாருக்கு மனம் வரும்?
பகை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச்சொட்ட
அப்பா மேல் வருவார்
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான் அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார் மனசுக்குள் தூரெடுக்க
No comments:
Post a Comment