INFOS SMART

Sunday, April 7, 2024

முருகன் பக்தி பாடல் 2

முருகா

அறுபடைவீடும் அருள் வழங்கும் முருகா அருகே நீ ஓடோடிவா...

மூவிரண்டு முகம் ஜொலிக்க  ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா...

தடை நூறு வந்தாலும் செயல் வெற்றி ஆக்கித்தரும் தாராள குணம் கொண்டவன்

நீ வலைவீசும் அறிவுக்கு தொலைவான வனாகி மாறாது அருள் செய்பவன்

தீராத காதலொடு திருவடியை தோளுபவர்க்கு திரவியமே தருகின்றவன்

நீ தாராள உள்ளமொடு தவக்கோலம் கொண்டு பெரும் தார்மீக பொருள் தந்தவன்

குளிர்ச்சிதரும் தென்றலிலே மகிழ்ச்சியுடன் விண்ணதிலே  பறக்கும் உந்தன் சேவற்கொடியே 

மன தளர்ச்சியின்றி தனை மறந்து மலர்ச்சியுடன் தனிகையிலே  நடம் புரியும் தொகை மயிலே 

பன்னீரில் அபிஷேகம் வெந்நீரில் அலங்காரம் அதிரூபம் கொண்ட முருகன்..

நீ புரியாமல் அடியேனும் பிழை நூறு செய்தலும் பொறுத்தருளும் செல்வக்குமாரன்..

ஒய்யார மையிலேறு உன் காட்சி எழில்யாவும் ஒளிவீசும் தெய்வாம்சமே 

பொய்யான என்வாழ்கை புவிமீது நிலையாக அருள்செய்ய வரவேணுமே, நீ அருள்செய்ய வரவேணுமே..

சினம்கொண்ட என்மனதை இனம்கண்டு அருள்செய்து வளமாக வைத்த முருகன்..

நீ பசுதேடும் கன்றெனவே பசியோடு வந்த என்னை பரிவோடு காத்த குமரன் 

படியேறி கால்நடக்க காவடிகள் தோள் சுமக்க துணையெனவே வந்த முருகன் 

படிப்பறிவும் எழுத்தறிவும் குறைந்தஎன்னை உலகில் இன்று புலமைபெற செய்த குமரன் 

தோல்விகண்டு துவளாத வெற்றிகண்டு மகிழாத மனம் கொடுத்த அன்பு முருகன்

நீ தேடிவந்த பகையாவும் திசைமாறி பொகசச்செய்து  என்னை ஆளும் செந்தில் குமரன்

விழுந்தவர்கள் எழுவதுவும் எழுந்தவர்கள் விழுவதுவும் முருகா உன் செயலாலன்றோ 

இங்கு அழுபவர்கள் சிரிப்பதுவும், சிரிப்பவர்கள் அழுவதும் குமரா உன் தயவாலன்றோ 

அந்தி பகல் எப்பொழுதும் தங்கு தடை இல்லாமல் உந்தன் முகம் கண்ணிலாடும் 

தினம் எந்தநிலை கொண்டாலும் கந்தன் துணை என்றாலே வந்தவினை மெல்ல ஓடும் 

பணம்பதவி தேவையில்லை பொன்பொருளும் நாடவில்லை முருகா உன்னருள் போதுமே 

உயிர் வாழுகின்ற காலமெல்லாம் மாளிகையில் நாட்டமில்லை குமரா உன்நிழல் போதுமே, குமரா உன்நிழல் போதுமே 

கல்லாக கிடந்த மனம் பூவாக மலரந்தவிதம் கந்தா உன் கருணையன்றோ நான் எல்லாம் இழந்த பின்னும் ஜீவன் இருப்பதிங்கே வேலா உன் அருளாலன்றோ 

கோடிபணம் இருந்தாலும் மேலும் அதை தேடுகின்ற மானிடர்கள் கூட்டம் நடுவே மனம் தேடியுனை திரிந்தபடி திருப்புகழை பாடும் என்னை நடிவந்து காத்தகுருவே.

ஆசையெனும் துண்டிலிலே மாட்டிக்கொண்ட என்மனதை இதமாக மீட்ட முருகன்,  மோகம் என்னும் தீசுழலில் முங்கிவிட இருந்த என்னை முழுதாக காத்த இறைவா...

நீரெடுத்த மேனியுடன் ஆறெழுத்தில் பேரெடுத்து நினைவெல்லாம் இனிக்கின்றவன் 

நீ ஓரெழுத்து ஆயுதமாய் ஒளிர்கின்ற வேலெடுத்து உறுதுணையாய் வருகின்றவன் எனக்கு உறுதுணையாய் வருகிறவன் 

தேனெடுத்து தினைவளர்க்கும் சிறுகுறத்தி வள்ளியவள் சிந்தையிலே நின்ற மன்னவா..

நீ நாடிவரும் பக்தர்களின் நாட்டமதை தனித்தருளும் ஞானகுருநாதன் அல்லவா..ஞானகுருநாதன் அல்லவா 

ஈசன் மகனே எனை காக்க இங்கே உனையன்றி வேறாறையா..

நெஞ்சார நன் நினைக்க பஞ்சாமிருதம் கொடுக்கும் ஒரு தெய்வம் நீதானையா ...ஒரு தெய்வம் நீதானையா..

தெய்வானை வள்ளியுடன் மணக்கோலம் கொண்டு திருப்பரங்குன்றம் வாழ்கிறவன் 

நீ தேவர்களை காத்திடவே வீரமுடன் வேலெடுத்து செந்தூரில் ஆழ்கின்றவன் 

மாங்கனிக்கு கோபம் கொண்டு பார்புகளும் பழநியிலே ஆண்டி என கோலம் கொண்டவன் ..

நீ தத்துவத்தின் சாறெடுத்து சுவாமிமலை எல்லையிலே தகப்பனுக்கு புத்தி சொன்னவன் 

இகழ்தலையும் புகழ்தலையும் ஒருமுகமாய் கருதும்படி செவி உரைத்த முத்துக்குமரன் 

நீ வறுமையையும் வளமையையும் சமநிலையாய் உணரும்படி மதிகொடுத்த செல்வக்குமாரன் 

தேவைகளை பூர்த்திசெய்யும் தேன்சொரியும் மூன்று தமிழ் குமரா உன்கோவிலாகும் 

தினம் தேடிவரும் பக்தர்களின் தெளிவான முதிர்ந்த மனம் முருகா உன் மையிலும் ஆகும் 

வேடன் உருக்கொண்டு பெரும் வேங்கைமரமாகி நின்ற வெந்நீர் அணிந்த முருகன் 

நீ வாடுகின்ற உள்ளமதில் வற்றாத அருள் சேர்க்கும் வானோர்கள் போற்றும் தலைவன்

நீரெடுத்த மேனியுடன் ஆறெழுதில் தேனெடுத்து நினைவெல்லாம் இனிக்கின்றவன் 

நீ ஓரெழுத்து ஆயுதமாய் ஒளிர்கின்ற வேலெடுத்து உறுதுணையாய் வருகிறவன் ...எனக்கு உறுதுணையாய் வருகிறவன்

அறுபடைவீடும் அருள் வழங்கும் முருகா அருகே நீ ஓடோடிவா..

மூவிரண்டு முகம் ஜொலிக்க  ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா...

No comments:

Post a Comment